Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 9ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், குறிப்பிட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்றும் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்காக அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், ராமர் கோயில் கட்டுவதற்காக அறக்கட்டளை ஒன்றை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய, இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட 18 மனுக்களை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான நீதிபதிகள் இன்று விசாரித்து, தள்ளுபடி செய்தனர்.